Saturday, October 15, 2011

தேர்வு




எதில் தேறினாய் ?
பண்பிலா ?
பட்டறிவிலா ?
ஒற்றுமையிலா ?
ஒழுக்கத்திலா ?
அன்பிலா ?
ஆற்றலிலா ?

எதில் தேறினாய் ?

இரு குறட்பா,நான்கு கேள்விகள்
பொருளறியாமல் மனனம்
செய்தலே தேர்ச்சியா ?
படம் வரைந்து பாகம் குறித்தலும்
உதவிப் படம் வரைந்து வடிவியல்
செய்தலுமே தேர்ச்சியா ?
அது தெரியாததால்,

எட்டிப் பார்த்தாய் ,எழுந்து நின்று
பார்க்க முயன்றாய்
எழுதிக் கொண்டு வந்திருந்த
நுண்ணெழுத்து விடையில் கேட்டிருந்த
கேள்விக்கான விடையில்லை எனினும்
விடவில்லை நீ! அதையே எழுதினாய்
தாளை மாற்றி எழுதிப் பார்த்தாய்!
ஆளை மாற்றியும் எழுதிப் பார்த்தாய்!
எதில் தேறினாய் நீ ?

Monday, October 3, 2011

மனித நலப்பொருளாதாரம்

நவீன பொருளாதாரச் சிந்தனைகளின் ஒரு பிரிவே மனிதநலப் பொருளாதாரம்.
விவேகானந்தரின் பொருளாதாரச் சிந்தனைகள் இந்தப் பிரிவைச் சேர்ந்தவை.

அமர்த்ய செனின் மனிதநலப் பொருளாதாரம்(welfare economics)
தங்கள் தலையெழுத்தை மாற்றிக் கொள்வதில் ஏழைகளுக்குச் சிறிதும் சுதந்திரமே இல்லை என்பதை அவர்களுடன் நாம் பழகும்போது தான் புரிந்து கொள்ள முடியும்.
'திறமைகளை வெளிப்படுத்த முடியாத நிலை தான் வறுமை'என்று கூறுகிறார் அமர்த்ய சென்.மக்களை மென்மேலும் திறமைகளை வெளிப்படுத்துமாறு செய்வது தான் வறுமையைப் போக்குவதற்கான சிறந்த வழி.
திறமைகளை வெளிப்படுத்த முடியாததால் தான் வறுமை தொடர்கிறது.இந்தியாவின் ஏழைகள் இந்தச் சுழியில் சிக்கித் தவிக்கிறார்கள்.
செய்யும் தொழிலே தெய்வம்-கொண்ட
திறமை தான் நமது செல்வம்.

Tuesday, September 20, 2011

வேலைக் கோட்பாடு


மார்க்ஸின் மூன்றாவது கருத்து இது.இதனைப் புரிந்து கொள்வதன் மூலம் சுவாமி விவேகானந்தரின் வேலைக்கோட்பாட்டின் பல ஆழமான பரிமாணங்களை அறிந்து கொள்ளலாம்.
வேலை என்பது சம்பாதிப்பதற்கான ஒரு வழி, புற வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான ஒரு வழி என்ற கண்ணோட்டத்திலேயே பல சிந்தனையாளர்கள் பார்க்கின்றனர்.ஆனால் மார்க்ஸ் அதன் மன இயல் பரிமாணத்தில் கவனம் வைத்தார்.வேலை என்பது வாழ்க்கையின் அடிப்படைத் தத்துவம்,மனிதனின் அக வெளிப்பாடு அது என்று கண்டார் அவர்.வேலையின் வாயிலாக அகத்திலுள்ள படைப்பாற்றல் வெளிப்பட,வெளிப்பட அந்த வேலையே மனிதனில் அக மாற்றங்களை ஏற்படுத்துகிறது.வேலையின் மூலம் அகத்திலுள்ள தெய்வீகம் வெளிப்படுவது பற்றி விவேகானந்தரும் பேசுகிறார்.எனவே இந்த விஷயத்தில் மார்க்ஸீம்,விவேகானந்தரும் ஒத்த கருத்து உடையவர்களாக இருக்கிறார்கள்.

Monday, September 12, 2011

புகைப் படம்


வண்ணமா?

கறுப்பு ,வெள்ளையா?

கவலையில்லை.

வாழ்வின் பதிவனைத்தும்

வனப்பே !

Monday, September 5, 2011

ஆசிரியர் தினம்

ஆசிரியத் தொழில் -ஆஹா
எத்துணை அழகானது?
தொழிலா இது?- இல்லை

தவம் ,தியானம், யோகம்

ஆசிரியரைப் பார்க்கையிலே
அகம் மகிழ்கிறதென்றால்
ஆசிரியராய் நிற்கையிலும்
அகம் குளிர்கின்றதே

ஏறி வந்த ஏணியினை
எண்ணிப் பார்ப்பதொரு சுகம்
ஏணியாய் நிற்பது கூட
எந்நாளும் சுகமே....

Friday, August 19, 2011

எல்லோர்க்கும் நன்றாம் பணிதல்

வள்ளுவம் உரைத்திடாத வழிமுறைகளே வாழ்க்கையில் இல்லை.தலைப்பாய் அமைந்து இருக்கும் இவ்வடியானது வாழ்வின் உயர் பண்பான பணிவு குறித்துச் சொல்லுவதாய் அமைகின்றது. இந்த அடி பற்றிச் சொல்லுகின்றது அடக்கமுடைமை என்ற அதிகாரம்.இந்த அதிகாரத்தின் முதல் குறளானது பணிவு என்பது ஒருவரைத் தேவருக்கு ஒப்பாக்கும் என்பதனை,
'அடக்கம் அமரருள் உய்க்கும்'என்கிறது.

மேலும் சான்றாண்மை என்ற அதிகாரம் கூறுவதாவது,
'ஆற்றுவார் ஆற்றல் பணிதல்'.அஃதாவது , திறமையாளரின் மிகப் பெரிய திறமை பணிந்து நடப்பது என்கின்றது.
செல்வமுடைக்கும் படையாக திரிகடுகம் சொல்கிறது.
''தாழ்வின்றிக் கொன்னே வெகுளி பெருக்கலும்''என்று.இஃது உணர்த்துவது அடக்கமில்லாமல் வீணாகக் கோபப் படுதல் செல்வத்தை அழிக்கும்.
இத்தகைய உயர் பண்பாகிய பணிவு நம்மிடம் இருந்தால் நாம் பேசுவன யாவும் இனிமையோடிருக்கும்.அதனையும் செந்நாப் புலவன் செப்புகின்றானே, 'இனியவை கூறலில்',
''சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்'' என்று
பணிவிருந்தால் பிறக்கும் சொற்கள் இனிமையோடு கூடியதாய் இருக்கும்.அவற்றைச் சொல்லுகின்றவர்க்கு இம்மை மட்டுமல்லாது,மறுமையிலும் கூட இன்பம் மட்டுமே விளையும்.
வாழ்வினில் வேண்டும் துணிவு
விலக்கிடல் வேண்டும் முனிவு
துணிவோடு சேர்ந்த கனிவு
இதற்கெலாம் வேண்டும் பணிவு.

Monday, August 15, 2011

சுதந்திரம்


தண்ணீர் விட்டா வளர்த்தோம் ?சர்வேசா
இப் பயிரைக் கண்ணீரால் காத்தோம்
கருகத் திருவுளமோ?
கதறினாயே பாரதியே
பலனில்லை இன்றும்
கருகும் உயிர்கள்
கறுப்புப் பண ஊழல்கள்
எங்கே போனது சுதந்திரம்?

எந்திரமாய் இயங்கும் உலகில்
தந்திரமாய்க் காரியம் செய்யினும்
மந்திரத்தால் மாங்காய் விழுமா?
சுதந்திரம் தான் சுகமே தரினும்
சூட்சுமமான சுமுகம் தருமா?

சுதந்திரத்திற்கான சூட்சுமம் காண
இயந்திர மனம் நிறுத்தி,
இதயத்தில் ஒளி ஏற்று-அந்த
ஒளியை வாழ்வின் வழியாய் தந்து

உயர் பண்பு,ஒழுக்கம் தந்து
மனித வாழ்வின்
துயர் துடைக்கும் மாண்புடைய பாரதம்

ஆன்ம ஒளி தனை ஏற்றி
மானுட வாழ்வின்
பான்மை உயர்த்திடும் பாரதம்

கலைகள் ,கல்வி யாவும் தந்து
மக்கள் வாழ்வில்
நிலை உயர்த்தியது பாரதம்

உலகம் உய்யவே
கலகம் தவிர்த்திட
உரைத்தது என்றும் பாரதம்
உரைப்பதொன்று,உறுவதொன்று
என்றிருந்தால்
உருப்படுமா நம் பாரதம்?

பாரதம் மட்டுமா?பாரோர் யாவரும்
பண்பில் சிறந்திட வேண்டும்
பண்படுத்துதல் நிலங்களுக்கு மட்டுமா?
உளங்களுக்குமே கேளீர்

உளம் உயர்த்த நலமே பெருகும்
நன்மைகள் யாவும் சாத்தியமே
சாத்தியம் இவையெல்லாம் சத்தியமென்பது
சுதந்திர வாழ்வின் சூட்சுமமே!


Friday, August 12, 2011

புதுக் கவிதை

‘’ இனியொரு விதி செய்வோம்’’

செய்தாயிற்று,

இலக்கணம் வகுத்து

இலக்கியம் படைப்போம்

படைத்தாயிற்று.

படைத்த இலக்கியம்

செய்த விதி

பிழையென்றானது.

இலக்கண மரபு மீறல் ,

பிழையென்ற கொள்ளலாகாது

இலக்கியமில்லையென்றும்

தள்ளலாகாது,

புதுக்கவிதை எனவும்

புரிந்து கொள்ளலாம்.

Thursday, August 11, 2011

வளைதல்


வளைந்தால் மட்டுமே வாழ்வா ?
வசதிக்காக வளைவது என்பதும்
வன்முறை ஆகாதா?

தலையே இல்லா உடலை நாமும்
என்னவென்று சொல்வோம்?
புதுத்தலை பொருத்தி இயங்கும் வாழ்வு
புனரமைக்கப் படுமா?

மூளை இட்டிடும் கட்டளையால் தான்
முழு உடலும் இயங்கும்
மூளையின் கட்டளை தவறென்றானால்
முறையற்றே மயங்கும்.

மயங்கிய தன்மையாயிருந்தாலும் கூட
இயக்கம் என்பதிருக்கும்
இயக்கம் என்பது இருப்பதனாலே
இளக்கம் வந்திடுமா?

இளக்கமில்லா இறுக்கமென்பது
இயந்திரமாகாதா?

மயக்கமும்,இறுக்கமும் கொண்ட மனது
மதி கெட்டே மாயும்
மதி கெட்டே மயங்கிய மனது
சதி மட்டும் புரியும்

விதியால் விளக்கிட முடியாததற்கு
விலக்கம் ஒன்றே தீர்வு.

Sunday, August 7, 2011

நட்பு

பழகிய நட்பு எவன் செய்யும் கெழுதகைமை
செய்து ஆங்கு அமையாக்கடை?
நட்பு,
அந்த அழகிய வார்த்தை
தந்த அகர வரிசையில்
மற்றொரு பரிமாணம்
இந்த நட்பு,
குறிஞ்சி மலர் தான்
ஆம்! இது சற்று வித்தியாசமானது
பன்னிரு ஆண்டுக்கொரு முறை
மலர்ந்தது அல்ல,
பன்னிரண்டு ஆண்டாய்
மலர்ந்திருந்தது.
அனிச்சமாய் சில தருணங்கள்
அமைந்து பட்டிருக்கலாம்
ஆனாலும் என்ன?
மலரும் நினைவுகள் -என்றும்
சுகமே
மனதின் நினைவுகளில் -நீங்கா
இடமே!

Wednesday, August 3, 2011

மனிதத் தேவை

சுவரை   நிமிர்த்திட  -இவள்
வளைகிறாள்-வாழ்வை
வளைக்கின்றாள்!

உறைவிடம்   உருவாக்கி
உணவு ,உடை    உண்டாக்குவாளா?
உயிர்  உருக்கி ,உழைப்பு   பெருக்கி
உயர்வு   பெறாவிடினும்
உலகின்  மாறாத  மனிதத்  தேவை
உணவு ,உடை ,உறைவிடம்
பெறுவாளா?

Saturday, July 16, 2011

கர்ம வீரர்


மனதில் மலர்ந்திட்ட மலர்களை
கவிமாலையாக்கி காணிக்கையாக்குகின்றேன்
கர்ம வீரனின் கமலபாதங்களிலே

தமிழகத்தின் வரலாற்றில் ஒரு முத்திரைச்சொல்
கர்ம வீரன்-ஒரு
கறுப்பு மனிதன் கர்மவீரன் ஆனகதை கேளுங்கள்
காமராசரே,நீர் பிறக்குமுன்பே விருது
கிடைத்து விட்டதே,உந்தன் மண்ணுக்கு!
நீ அங்கே அவதரிக்கப் போவதை
அறிந்தா?அல்லது அறிவிக்கவா?

இராசாசியின் எழுத்து,
அண்ணாவின் பேச்சு,
அம்மையின்ஆங்கில வளம்
கலைஞரின் தமிழ்ப்புலமை
இத்திறம் ஏதும் இல்லாது
எத்திறத்தில் நீ வென்றாய்?
காலங் கடந்து நின்றாய்?

மணம் புரிந்திடவில்லை-மக்களின்
மனம் புரிந்ந்திட்டாய்
மதிய உணவு தந்தாய்
மகத்தான தலைவனானாய்-மாணவரின்
கல்விக் கண்ணைத் திறந்தாய்
காலங்கடந்து நின்றாய்
அணுவிஞ்ஞானியின் ஆற்றலும்
பாரிஸ்டரின் பண்பு நலனும் கொண்ட
கறுப்பு காந்தியே,
பாரதம் போற்றும் தலைவனே,
சாதனை நாயகன் உன்னைச் சிலர்
சாதிச் சிறையில் அடைத்திட்டாலும்
மழைத்துளி பருகிய சக்கரவாகம் நீ
மக்களின் தலைவனல்லவா?

சிவகாமி மகனிடம் சேதி சொல்லச் சொல்லி
கவியரசு சொன்னவை
கொட்டிலிலே தோன்றிக் குவலயத்தில் பேரெடுத்து
இட்டமுடன் சேர்ந்தோர்க்கு இறைவனாய் தோற்றமுற்ற
ஏசுபிரான் மேற்றிசையில்!
இளைப்பிரான் கீழ்த்திசையில்!
சத்தியமே தெய்வம் சமத்துவமே வாழ்க்கையென
இத்தரையில் ஓர் நாள் இளவரசாய் வந்துதித்த
புத்தபிரான் நேபாளம்!புனித பிரான் விருதுநகர்!

மென்மையான தலைவனின் மேன்மை உரைக்க
இதைவிடச் சான்றும் வேண்டுமோ?
                                                                                        (மீள் பதிவு)

Wednesday, July 13, 2011

இணையம்

                                                  யாதும் ஊரே,யாவரும் கேளிர்
                                                  இது,
                                                  வெற்றுச்சொல்-இணையத்தினாலே
                                                   வெற்றிச் சொல்.
                                               யாதும் ஊரே,யாவரும் கேளிர்
                                                இது வெறும்
                                               வார்த்தை-இணையத்தினாலே
                                               இது,வாழ்க்கை.
                                            
                                               உலகியல் தந்திடா நிறைவை
                                               உலவிகள் தந்திடுது.
                                               பழகப் பழகப் புளிக்கிறது
                                               பக்கத்திலிருக்கும் நட்பு
                                               பார்க்காமல் பேசுவது கூடப்
                                               பிடிக்கிறது,பண்பான நட்பு!
                                    

                                                பிரபஞ்சம் கைக்குள் அடக்கம்
                                                பிரச்சனையும் கணினிக்குள்
                                                அடக்கம்,எதில் இல்லை?
                                           அஞ்சல் தலையில்லை
                                           முத்திரையில்லை,

                                          அடுத்த நொடியில் கடிதம்
                                          அகிலயெல்லையில்!
                                          முகப் புத்தகம் எத்துணை
                                           அகம் காட்டுகிறது!
                                              வலைப்பூவுக்குள் எத்துணை
                                              வாழ்க்கை வழிகள்?
                                              வலையில் விழ,விழ
                                              வாழ்வின் எல்லைகள்
                                              விரிகிறது........
                                              இவையெல்லாம் இணையம்
                                              தந்திடும் இமயவசதிகள்

                                             கணினி செய்யும் விந்தை?
                                             கணக்கிலடங்காது
                                             இணையத்தின் இதயம்
                                             கணினி,
                                             கணினியின் கால்கள்
                                             இணையம்.
                                            இணைய இணைப்புக் கொடுத்து
                                            விட்டால்,
                                            இகத்தின் வாசல்கள் திறக்கிறது.
பழைய  பதிவு

Monday, July 11, 2011

அரசியல் அல்ல.....ஆனால்?

                                         எத்தனை  நாள்  இணைப்புப் பயிற்சி  கொடுப்பது?அந்தோ பரிதாபம்...அறியாப்  பிள்ளைகளில்லை,ஆசிரியப்  பெருமக்கள்.என்ன  செய்வது?
பத்துப்  பக்கங்களை  வைத்துக்  கொண்டு  பதினைந்து  நாள்  ஓட்டியாயிற்று.
                                                              இன்னும்  எத்தனை  நாட்களோ?தெரியவில்லை.
வாய்த்ததொரு  வாய்ப்பு  என்று  எண்ணிக்  கொண்டு  தமிழ் இணையம் அறிமுகம்  என்று  பாடக் குறிப்பில்  எழுதி விட்டு  வலைப்பூக்கள்  குறித்தும்,தேடு பொறிகள்  மூலமாக  நாம்  ஏற்கனவே   தரவிறக்கி  வைத்துள்ள   இலக்கிய  நூல்கள்  குறித்தும்  மாணவியர்க்கு  அறிமுகம்  செய்யலாம்  என்று  கணினி  அறைக்கு  அவர்களை   அழைத்துச்  சென்றால்  இணையப் பயன்பாடு  கடவுச் சொல் போட்டுப் பூட்டப் பட்டிருக்கிறது.
                                                       அலுவலக  வேலைக்காகப்  பயன்படுத்தப் படும்  அந்தக்  கணினியில்  இராணுவ ரகசியம் ஏதுமில்லை.அதைப் பயன்படுத்தும்  ஆசிரியரிடம்  நீங்களே   கடவுச்  சொல்லைப்  பயன்படுத்தித் திறந்த பின் பிள்ளைகளுக்கு  அதிக பட்சமாக ,பத்து  நிமிடம்  இணையம்  குறித்து  சொல்கிறேன்  என்றேன்.அனுமதி   மறுக்கப் பட்டது.
                                                     அரியலூர்  மாவட்டத்தில்  நடுநிலைப் பள்ளியில்  6,7  வகுப்பு  மாணவர்கள்  விக்கிபீடியாவில்  கட்டுரை  எழுதுகிறார்களாம்.பத்தாம்  வகுப்புப் பிள்ளைகள்  பாவம்  குறிப்பேட்டிலேயே  எழுதிக்  கொள்ளட்டும்  கட்டுரைகளை.காட்சிப்  பொருளாக  இருக்கும்  கணினியை  பயன்பாட்டில்  கொண்டு  வர  வாய்ப்புண்டா?
                                                          நமது  உபயோகத்திற்கு   வீட்டில்  இணைய இணைப்பு  உள்ளது.பள்ளியில்  நமது  சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்தப் போவதில்லை..சென்ற  ஆண்டு  இணைய மாநாட்டின் போது  நடந்த  வரைகலைப் போட்டிக்கான  பதிவை  வீட்டில்தான்  செய்தேன்.நாளொரு நூல்  குழுமத்தில் இருந்து  பெறும்  குறிப்பு  கொண்டு  கட்டுரைகள்  தயாரிக்க  உதவுகிறேன்.இதை  நாம்  செய்தாலும்,மாணவியர்க்கு  பள்ளியில் தானே  காண்பிக்க முடியும்?அரசுப் பள்ளியில்  ....?
                                           
                                 
                                                       

Friday, June 24, 2011

விதியா?மதியா?





                      
                                         சுற்றும்  பூமி   சுழலும்  தன்மை
                                         விதியின்  வழி
                                         சுத்த   பூமி   ரத்த   பூமியாவது
                                          மதியின்   பழி

                                         இயற்கை   அன்னை  இயக்கங்  கொள்வது
                                         விதியின்   வழி
                                        இணக்க  பூமி   இன்னல்  உறுவது
                                        மதியின்   பழி

                                        பால் வெளி    இயக்கம்  பாங்காய்  நடப்பது
                                        விதியின்    வழி
                                        பாங்கான   இயக்கம்  பாழாய்ப்   போவது
                                        மதியின்    பழி

                                      நினைப்பது  ஒன்று   நடப்பது   ஒன்று
                                      விதியின்     வழி
                                     சொல்வது  ஒன்று  செய்வது  ஒன்று
                                     மதியின்  பழி

                                    விதியின்  வழியே  வாழ்வென்றாலும்
                                    விளையும்  இன்பம்  மதியின்  வழி
                                    சொல்லும்  செயலும்  ஒன்றென்றானால்
                                    நீங்கிப்  போகும்  மதியின்   பழி

                                      

Sunday, June 19, 2011

வண்டுதிர்க்கும் பூக்கள்


                                பூவுக்குள்ளே   பூவையே  தேடுகிறாயா?
                                பொன்  வண்டே !
                                ஒட்டிய  மகரந்தம்   உதிர்த்தே
                                இன்னொரு  பூ  தருவாயோ?

                                பூவாகிக், காயாகிக் ,கனியாக்கும்
                                பூரணத்துவம்  தொடர்கிறாயா?
                                பூவுலகு  அழகின்  பூரணம்
                                பூவையுலகு  உலகின்  பூரணம்

                               வண்டுதிர்க்கும்  மகரந்தம்
                               மலராய்  மலர்கிறது
                                வாழ்வு   தந்திடும்  பூரணம்
                               மழலையில்  மிளிர்கிறது

                              கனியின்  தொடர்ச்சி
                              மலர்களின்  மலர்ச்சி
                              குவலயத்தின்  தொடர்ச்சி
                               குழந்தையின்  வளர்ச்சி

                              வண்டுதிர்க்கும்  பூவே-நீ
                               மலரா?மழலையா?
                                                                               

Wednesday, June 15, 2011

தூரத்தில் வெளிச்சம்


                                              இதயக் குகையின் ஒளி
                                              இமயம் தாண்டியதா?
                                              இந்தியம் கடந்ததா?

                                              விந்தியம் தாண்டியதா?
                                               வீழ்ந்துபட்டுப் போகுமா?இல்லை
                                              வீறு கொண்டு தான் எழுமா?

                                               அரபியைத் தாண்டிடுமா?
                                               ஆழிப் பேரலையில் அமிழுமா?
                                              அலை கடலைக் கடக்குமா?

                                              தூரத்தில் வெளிச்சம் !
                                              கலங்கரை விளக்கம் !!

Sunday, June 5, 2011

உயிர்களிடத்தில் அன்பு வேணும்


                                    அழகிய  வீடு.  பின்புறம்  ஒரு   அற்புதத்  தோட்டம்   அமைத்திருந்தார்  முத்தண்ணா.முத்தண்ணா  ஜெயராஜ்  வீட்டின்  தோட்டக்காரர்.
மாலை நேரம்  ஜெயராஜ்  வீட்டுத்  தோட்டத்தைச் சுற்றி  வந்து  கொண்டிருந்த  பொழுது  மரத்தின்  மீது  கூடிருப்பதைக்  கண்டார்.
                                                            அவர்   பார்த்த  அந்த   சமயத்தில்   தாய்ப்பறவை   குஞ்சுகளுக்கு  இரை   ஊட்டிக் கொண்டு  இருந்தது.பாரதிதாசனின்  ''குஞ்சின்   குடல்    நிரப்பும் '' என்ற    வரிகள்  தான்   மனதில்    ஊடாடியது.அந்தப் பறவை  வாய்  திறந்திருந்த   அழகு    மழைநீரை  நாடும்   மலரைப்  போலவும்,மழையை அருந்தும்  சாதகப் பறவை  வாய்   திறந்து  சாதகம்    செய்வதாகவும்    ரசனையோடு  கூடிய  சிந்தனைகள்   மனதில்   ஒன்றன் பின்  ஒன்றாய்     வந்து  போனது.
                                                         முத்தண்ணாவை    அழைத்தார்     ஜெயராஜ்.செடிகளுக்கு   நீர்     வார்த்துக்  கொண்டிருந்த  அவர்    வேகமாக   ஓடி வந்தார்.கூட்டினைக்  காண்பித்த   அவரிடம்   முத்தண்ணா   வேகமாக   ,''நானும்   பார்த்தேன் ஐயா,இன்றே  கலைத்து   எறிந்து விடுகிறேன் '' என்றார்.
அதற்கு   ஜெயராஜ்,முத்து! கலைக்காமல்   இருப்பது   மட்டுமல்ல.முடிந்தால்  பத்திரமாகப்  பார்த்துக் கொள்.உரிய  பருவம்   வந்ததும்   தானாகப்   பறந்திடட்டும்   என்றார்.முத்தண்ணாவும்,சரி  ஐயா   என்றார்.
''உயிர்களிடத்தில்    அன்பு   வேணும்''   பாரதியின்  வரிகளைப்  படம் பிடித்துக்  காட்டுவதாயிருந்தது  ஜெயராஜின்  செய்கை.

Friday, June 3, 2011

ஆற்றல் மிகு கவிஞன்

                                                     
                                    இயற்கையான  ஆற்றலென்று
                                    இன்னமுதக்  கவி  இயம்பிய பின்
                                    பேர் அரசின்  பெருமை  பாடும்
                                     பேறு   உண்டா   எனக்கு?

                                    உந்தன்  நூல்களை  வாசிக்க,வாசிக்க
                                    எந்தன்  இதய  வானில்-நாளும்
                                     வைகறை   மேகங்கள் தான்!

                                    சகோதரா,உங்கள்
                                    மௌனப்பூ  பேசிய மழலை தான்
                                    எந்நாளும் என்னுரைக்கு  முன்னுரை!
                                 
                                    கறுப்பு  நிலாவைப்  பாடாமல்-வகுப்பில்
                                    கவிக்கோ  இளங்கோவின்  சிலம்பைச்
                                    செப்பியதில்லை!

                                    கற்பொன்றில்  மட்டும்   கண்ணகியைப்
                                    போலிருங்கள்,
                                    மற்றவற்றில்  அந்த  மடமகளை
                                    மறந்திடுங்கள்.

                                  வகுப்பறையில்  பிள்ளைகளைக்
                                  கூட்டாகச்  சொல்லச் சொல்லி
                                  குதூகலித்திருக்கிறேன்! 

                                 அலைகளை  தகுந்த  உரைகளாக்க
                                 தங்க கவி மகன்  உனையன்றி
                                தரணியிலே  யாருண்டு?

                                ஊசியை  ஒற்றுமையின்  சின்னமாக்கிய
                                உன்னதக்  கவியே!உயர்ந்தாய்  நாளும்  நீ,
                               
                                மழலை தனைக் கையிலெடுத்தால்
                                மகிழ்வோடு  சொல்லலாம்-ஆம்
                               பருத்து  விழுந்த  பரிசுச்  சீட்டே!
                               களஞ்சியம்    தான்  கண்மணியும்,
                              கவிதையைப்  போலவே!

                              ஆறாம் முறை விருது பெற்ற
                              ஆற்றல் மிகு கவிஞனே!
                               வாழிய பல்லாண்டு!!
                                

Wednesday, June 1, 2011

இனிமை







                                     
                                           
                                             
                                               மழலை     இனிமை
                                                மலரும்     புதுமை
                                                மண்ணுலகு   இனிமை



                                                தென்றல்    இனிமை
                                                தெம்மாங்கு   இனிமை
                                                தேனுலகு     புதுமை



                                               விண்ணும்   புதுமை
                                               விடியல்      இனிமை
                                               வியனுலகு  இனிமை



                                                இயற்கை    இனிமை
                                                இகமே      புதுமை
                                                இன்னுலகு   இனிமை


                                                இன்னுலகினையே
                                                இணைக்கும்  பாலமாம்
                                                 கணினிதான்  புதுமை-அதில்
                                                இணையம் தான்   இனிமை!