Friday, August 20, 2010

சக்தி பிறக்குது மூச்சினிலே

                                               தந்தையர் நாடென்றபோது
                                              சக்தி  பிறந்தது,எந்தன்
                                              சாகசக் கவி  பாரதிக்கு,எந்தனுக்கு

                                             அகண்ட  பிரபஞ்சம்  அகக்கண்ணில்
                                             விரிந்தால்,
                                             அன்பு  பெருகுது  மூச்சினிலே,

                                             ஆன்மீக  மணத்தில் மனமது
                                             தோய்ந்தால்
                                             ஆற்றல் வருகுது  மூச்சினிலே,

                                             இகமதில் உள்ள  இயற்கை காணில்
                                              இதமே  நிறையுது  மூச்சினிலே,

                                             ஈகை நிறைந்த மனமது  காணில்
                                             இன்பமே  பிறக்குது மூச்சினிலே,

                                            உன்னதமான  உலகது கண்டால்
                                            உருவாகும்  சக்தி மூச்சினிலே,

                                           ஊக்கம் என்றும்  உளத்திலிருந்தால்
                                           ஊற்றாய்  சக்தி  மூச்சினிலே,

                                          எல்லை இல்லாப் பரம்பொருளாலே
                                          எந்நாளும்  சக்தியே மூச்சினிலே,

                                           ஏற்றம்  என்றும்  வாழ்விலிருந்தால்
                                           ஏகமான  சக்தி   மூச்சினிலே,

                                           ஐயம்  போக்கி,ஐஸ்வர்யம் பெருக்கினால்
                                           ஆனந்தமான சக்தி மூச்சினிலே,

                                           ஒற்றுமை  நாளும்  நம்மிலிருந்தால்
                                           நலமான  சுவாசம்  நாசியிலே,

                                           ஓர்  குலமாய்  மனிதம்  வாழ்ந்தால்
                                           ஓங்குது  சக்தி  மூச்சினிலே,

                                         ஔவை  சொன்ன  மொழி
                                          ஔடதமானால்,
                                        ஆனந்தமான  சக்தி  மூச்சினிலே..........

Monday, August 16, 2010

எல்லாத் திசைகளிலும் விடியல்

                                            எங்கு  நோக்கினும்  மடியல் ,
                                            இதில்  எங்கே  விடியல்?

                                            எதிர்மறை  எண்ணத்தை
                                            எரித்திடவே  எண்ணுகிறேன்
                                            எதிர் நோக்கி  வருகிறதே
                                            எல்லாத்  திசையிலிருந்தும்!

                                            இயற்கையே,
                                            பேரழிவு  நிகழ்ந்தும் -நீ
                                            பேதலிக்கவில்லை -மேலும்
                                            பொங்குகின்றாயே,
                                            வெள்ளமாய்,வெடி விபத்தாய்,

                                           எத்தனை  அழிவு  நேர்ந்திடினும்
                                           அகம் அணு ஆயுத ஆக்கத்திலே,
                                           விடியும்  கீழ்த்திசையையும்
                                           வெடிப்புகை  மறைக்கிறதே,
                                           விடியல்  எங்கே?

                                           அகத்தை  அன்பாக்குவோம்,
                                           எல்லாத் திசையிலும்  விடியும்!
                                        
                                         பழக்கத்தைப்  பண்படுத்துவோம்,
                                         எல்லாத்  திசையிலும் விடியும்!

                                         கருணையோடு  காரியமாற்றுவோம்
                                         எல்லாத் திசையிலும்  விடியும்!

                                         அழிவு  தரும்    விஞ்ஞானம்
                                          தளரட்டும்,
                                          ஆற்றல்  தரும்   மெய்ஞானம்
                                          வளரட்டும்! வளர்ந்தால்
                                          எல்லாத் திசைகளிலும் இதமாய்
                                           விடியும்!எங்கும் சுகமே  படியும்!!

Sunday, August 15, 2010

அணு ஆயுதம் இல்லா அகிலம் சமைப்போம்

                        அனு தினமும்  நாளிதழை விரித்தால்
                        அணு குண்டு  வெடிப்புகளே
                        தலைப்புச்  செய்தியாய்,
                        தலை  போன  செய்தியாய்!



                        ஆற்றாமையால்  துடிக்கும்
                        மழலையரும்,மங்கையரும்
                        அலறிக் கொண்டு  ஓடும்
                        ஆடவரும்,பெண்டிரும்,

                        புகைப் படமாய்ப்  பார்க்கும் போதே
                        உள்ளம்    புண்ணாகிறதே,
                        இரக்கமற்ற  அரக்கர்களே,
                        இழி நிலையே,கடை நிலையே
                        கடைத் தேறவே  மாட்டீரா?

                        சுக்கு நூறாய்ச் சிதறும்
                       மக்கள்  கூட்டம்,
                        சுடுகாடாய் நாடு  மாறும்
                        கோரக் காட்சிகள்
                        எதிலிருந்து  சுதந்திரம்  அடைந்தோம்?

                        உலக சமாதானம் வேண்டி  பறக்கவிடும்
                     வெண் புறாவும்  வெடித்துச்  சிதறுகிறதே                    
                     வெடிகுண்டு  வெள்ளத்தில்.

                                               மாறுமா  இந்த  அவல  நிலை?
                                               மறையுமா  இந்த  துயரச்சுமை?

                                               சுதந்திரம்   பெற்று விட்டோம்
                                               தந்திரம்  கற்று,விற்றோம்
                                               யந்திர  உலகினில்  வாழும்
                                               மந்திரம்  அறிந்திடுவோம்
                                               மனதினை  மணமாக்குவோம்
                                              பின்னர்,

                                              சுந்தரமானதொரு  பூமிப்பந்தில்
                                             சுகமானதொரு   காற்றைச்
                                             சுவாசிப்போம் ,அதனோடு
                                             சுதந்திரத்தையும்    சேர்த்து!
                                         வந்தே   மாதரம்!வந்தே  மாதரம்!!       

Wednesday, August 11, 2010

ஆற்றல் மிகு கவிஞன்

                                                        
                                    இயற்கையான  ஆற்றலென்று
                                    இன்னமுதக்  கவி  இயம்பிய பின்
                                    பேர் அரசின்  பெருமை  பாடும்
                                     பேறு   உண்டா   எனக்கு?

                                    உந்தன்  நூல்களை  வாசிக்க,வாசிக்க
                                    எந்தன்  இதய  வானில்-நாளும்
                                     வைகறை   மேகங்கள் தான்!

                                    சகோதரா,உங்கள்
                                    மௌனப்பூ  பேசிய மழலை தான்
                                    எந்நாளும் என்னுரைக்கு  முன்னுரை!
                                   
                                    கறுப்பு  நிலாவைப்  பாடாமல்-வகுப்பில்
                                    கவிக்கோ  இளங்கோவின்  சிலம்பைச்
                                    செப்பியதில்லை!

                                    கற்பொன்றில்  மட்டும்   கண்ணகியைப்
                                    போலிருங்கள்,
                                    மற்றவற்றில்  அந்த  மடமகளை
                                    மறந்திடுங்கள்.

                                  வகுப்பறையில்  பிள்ளைகளைக்
                                  கூட்டாகச்  சொல்லச் சொல்லி
                                  குதூகலித்திருக்கிறேன்! 

                                 அலைகளை  தகுந்த  உரைகளாக்க
                                 தங்க கவி மகன்  உனையன்றி
                                தரணியிலே  யாருண்டு?

                                ஊசியை  ஒற்றுமையின்  சின்னமாக்கிய
                                உன்னதக்  கவியே!உயர்ந்தாய்  நாளும்  நீ,
                                எந்தன்
                                மகளின்  மகனைக்  கையிலெடுத்து
                                மகிழ்வோடு  சொல்லுகின்றேன்-ஆம்
                               பருத்து  விழுந்த  பரிசுச்  சீட்டே!
                               களஞ்சியம்  எங்கள்  கண்மணியும்,
                              கவிதையைப்  போலவே! 
                                 

மானுட சமுத்திரம் நானென்று கூவு

                                        அடகிலிருந்து  மீண்ட  நாம்
                                        அரசியலால்  அடிமைப்பட்டிருக்கும்
                                        மானுட  சமுத்திரத்தின்
                                        ஓர்  துளி  நான்!

                                        சாதி,சமயச்  சண்டைகளைச்
                                        சகித்திடவே   முடிந்திடாத
                                        மானுட  சமுத்திரத்தின்
                                        ஓர்  துளி  நான்!

                                       கையூட்டுக்  கலாச்சாரத்தால்
                                       கலங்கியே   தவித்திடும்
                                       மானுட   சமுத்திரத்தின்
                                       ஓர்  துளி  நான்!

                                       கண்டங் கடந்து  காசு காண
                                       விழையும்-கவலையால்  கரைந்திடும்
                                      மானுட  சமுத்திரத்தின்
                                      ஓர்  துளி  நான்!

                                       காப்பக  கலாச்சாரத்தால்
                                       கலங்கியே  தவித்திடும்
                                       மானுட  சமுத்திரத்தின்
                                       ஓர்  துளி  நான்!

                                      குரல்  கொடுக்கவே  முடியாத
                                      நிலையில்-கூவுவது  எங்ஙனம்?
                                      வன்மை   தவிர்ப்போம்,
                                      உண்மை   வளர்ப்போம்,
                                      நன்மை    செய்வோம்,
                                      தீமை     களைவோம்,
                                      அதன்   பின்
                                       உரத்த   குரலில்   கூவுவோம்,
                                       உவகையோடு   கூவுவோம்,
                                       மானுட    சமுத்திரத்தின்
                                       ஓர்  துளி    நானென்று! 

Tuesday, August 10, 2010

அறிவியல் கவிஞன்

                                                 தமிழன்னையின்  மணிமுடியில்
                                                 வைரம்    நீ!
                                                 தமிழ்  ஆழியில்   அகப்பட்ட
                                                 கறுப்பு   முத்து!!

                                                தமிழ்  வானின்  வைகறை  மேகமே,
                                               வாழ்த்த வயதில்லை  -வணங்கி
                                                மகிழ்கின்றேன்!
                                               போற்றிப் பாடும்  புலமை  இல்லை,
                                                புகழ்ந்து  நாளும்  பாடுவேன்!
                                                ஏற்றிப்  பாடும்  திறம்   இல்லை,
                                                என்றும்  நலம்  பாடுவேன்!

                                               வார்த்தைக் காற்று   மேகம்
                                                வருடினால்,
                                                வான்    மழை   பொழியாதே,
                                                வர்(ரு)ணனை   மழை!!
                                                விசும்பின்  துளி  வீழட்டும்,
                                                பசும் புல்லாய்  தமிழிதயங்கள்
                                                தளிர்க்கட்டும்!

                                              

ஆற்றல் மிகு தலைவர்

                                                   அணு    விஞ்ஞானியே,
                                                   ஆற்றல்   படைத்தோனே,
                                                    இனிய  பாரதம்    காக்க,
                                                    ஈகையாய்   வந்தோனே,
                                                   உன்மத்தமானவனே,
                                                   ஊர்  போற்றும்  உத்தமனே,
                                                   ஐயா,நீவீர்  வாழ்க!
                                                   எளிமையின்  வடிவே,
                                                   ஏற்றம்  கொண்டவரே,
                                                  
                                                   முடித் திருத்தம்  தேவையில்லை,
                                                   நாட்டின்
                                                  முகத்  திருத்தம்   செய்வதற்கு
                                                   சிதம்பர  ரகசியமில்லை-உமது
                                                   நீல  வண்ணம்  -ஆனால்
                                                   சிதம்பர  ரகசியமே!

                                                  மனிதனே  -நல்  மனம்
                                                  படைத்தோனே!
                                                  மரைக்காயர்  மைந்தனே
                                                  மண்ணெல்லாம்  மணம்-உன்னாலே!

                                                  அண்ணல்  இராமனைப்  போல்
                                                   அமைதியாய்க்  கடல்!
                                                   நீரும்  அமைதிக்  கடல் தான்
                                                  குணத்திலே  அமைதியாய்!
                                                  மனத்திலே   கடலாய்!!

                                                 இராமேஸ்வரம்   புனிதம்  பெற்றது
                                                 இன்னொரு  முறை!!

Monday, August 9, 2010

எரியும் வயிறும்,எரியாத அடுப்பும்

                                                எரியாத   அடுப்புக்கு ஒரே காரணம்
                                                வாட்டிடும்  வறுமை!

                                               எரியும் வயிறுகளுக்கோ
                                               எண்ணற்ற   காரணங்கள்!

                                               அடுத்தவனின் ஆக்கம் கண்டு
                                                அடுப்பின் ஜூவாலையாய் சில வயிறு

                                              அதிகமாய்   உண்டு விட்டு
                                              அவதியுறும்  வயிறுகள்  சில

                                             அரை வயிறும்   நிரம்பாமல்
                                             அல்ல்லுறும்  வயிறுகள்  பலப்பல

                                            அதிகம்   அரைகுறையை  நிரப்பினால்
                                            அவ்விரு  எரிச்சலுமே  அணையும்!

                                          அக அழுக்கு   அகற்றப் பட்டாலொழிய
                                          அடுப்பின்  ஜீவாலை  அணைய
                                          வழியேயில்லை!!

தொ(ல்)லை பேசி

                                       அம்பானிக்கோர்   அழைப்பு
                                       வீடு கட்ட கடன்  தருவதாக
                                       விந்தையாய்  இருக்கிறது,
                                       விடை  கிடைக்கவில்லை

                                       அலுவலகம்  செல்லும் போது
                                       அவசரமாய்  ஓர்  அழைப்பு!
                                       பதட்டமாய்  ஓடுகிறீர்களா?
                                       நிதானமாய்  இந்தப் பாட்டைக் கேளுங்க
                                       கேள்வி  கேட்பாரில்லை,

                                       அயல்நாட்டில்  இருக்கும் மகனின்
                                        அழைப்புக்காக மட்டுமே  அலையில் பேசும்
                                        அலமுப்பாட்டிக்கும்  ஓர் அழைப்பு!
                                         நீங்க  யாரையாவது  காதலிக்கிறீங்களா?
                                        நடவடிக்கை  எடுக்க முடியுமா?

                                       தங்கையாக்களுக்கு  தவறுதல்  அழைப்பு
                                        வந்தாலென்ன?பரவாயில்லை
                                       வெங்கையாக்களின்  விண்ணப்பங்கள்
                                       நிறைவேற்றப் பட்டால்  சரி!

                                      நல்லவேளை!
                                     நிதி அமைச்சருக்கு வந்துவிட்டது
                                     தவறுதல் அழைப்பு!
                                      நீதி  கிடைத்து விட்டது!!
                                     

Saturday, August 7, 2010

மெழுகுவர்த்தி ஏன் அழுகிறது?

                                  மெழுகுவர்த்தியே !நீ
                                  அழுவதற்கென்றே
                                  அவதரித்தவளோ?

                                  மின்சாரத்தின்  தேவை
                                  கட்டாயமாகிப்  போன
                                 காலத்தில்   கணக்கற்ற முறை
                                 நிகழும்  மின்வெட்டு  கண்டு
                                கலங்கி  நீ  அழுகின்றாயோ?

                                நடிகையின்  வீட்டு
                                பிறந்த நாள்  கொண்டாட்டத்தில்
                                ஒய்யார  மேடையில்  உட்கார்ந்து
                                உருகி  உருகி  அழுதிடுவது
                                உன்  மேடை  சிதறுவதாலா?அப்
                               பெண்  வயது  கண்டு  பதறுவதாலா?

                               மாதாவின்  மலர்ப் பாதங்களில்
                              மருகி  நீ   அழுதிடுவது
                              மாய  மண்ணுலகில்  காணும்
                              மயக்க  நிலை   எண்ணியோ?

சுடாத சூரியன்

                                         வேரிலேயே    வெந்நீர்
                                         ஊற்றும்   வீணர்களே!
                                        தாங்குவாள்   என்பதற்காக
                                        நில மகளையும்  நிந்திக்கும்
                                         நீசர்களே!

                                        பூவுக்கும்  தீ வைக்கும்
                                        புல்லர்களே!
                                          அக்கினியைக்   கூட
                                       அலைக்கழித்துப்  பார்க்கும்
                                       அரக்கர்களே!

                                     பழக்கத்தின்   காரணமாக
                                     பழித்துத்   திரியும்
                                     பாமரன்கள்  பலருண்டு
                                    படித்து   வந்த  பின்பும்
                                    பண்பட்ட  மனம்வேண்டாம்

                                   பண்பற்று     இருத்தல்
                                   பாவச்சுமை   சேர்க்கும்
                                    பண்பற்றுப்  பழிக்கும்
                                    பாதகர்க்குப்  பதிலுரைப்பதில்
                                    பயனில்லை,பயனே  இல்லை
                               
                                   பெண்ணே!நீ
                                   ஆகாயச்  சூரியன்
                                   குரைக்கிறது  தெரு  நாய்கள்!

Friday, August 6, 2010

எல்லையில்லாப் பெருவெளி

எல்லை  கட்டிவிட்ட மனம்
ஏற்றம் பெற்றிடுமா?
தொல்லை தொலைந்திடுமா?
தொற்றித் தான் தொலைத்திடுமா?

எல்லை கட்டா எடிசனும்
அணை போடா அப்துல்கலாமும்
ஆற்றிய சாதனை கண்டு
அறிவியலுலகு வியந்த்து

பில்கேட்ஸின் மனமானது
எல்லை கட்டியிருந்தால்
எலிப்பொறிக்குள் சிக்கிச்
சிதையாதிருந்திருப்போமோ?

விஞ்ஞானத்தின் விரிவிலே
பிரபஞ்சம் சுருங்கிவிட்டது
சுருங்கிய உள்ளங்களாலே
சுற்றமெல்லாம் வெகுதூரம்

விஞ்ஞானச் சுகங்கள்
அஞ்ஞானத்தில் தள்ளிட்டதால்
மெய்ஞானம் மறந்திட்ட
தாய்மை கூட பொய்த்த்து

அகிலமே எல்லை என்று
அகம் விரியட்டும்-அதிலே
விரிசல்  விழாதிருக்கட்டும்
வியனுலகு எட்டிடுவோம்

வானமே எல்லை என-மன
வாசல்கள் திறக்கட்டும்-அதில்
வாய்ப்புகள் வந்து குவியட்டும்
வாழ்த்துக்களால் வாழ்ந்திடுவோம்

மரம் ஏறிப் பழம் பறிப்போம்
வேர்களை வீழ்த்திவிடாது
கடலிறங்கி முத்தெடுப்போம்
மூழ்கியே போய்விடாது

விரிந்த எல்லையிலே
வியனுலகு தொட்டிடுவோம்
பரந்த எல்லையிலே
பயன் அனைத்தும் எய்திடுவோம்

சாதனைகள்,சாகசங்கள்
சோதனைகள்,வேதனைகள்
சேர்ந்தியங்குவது  தானே
வாழ்க்கைப் பயணம்

விஞ்ஞானத்திலே மனம் விரித்தால்
விந்தைகள் ஏராளம்-அறிவியற்
சோதனைகள்,சோதனைகளா?
சாதனைகளா?

மெய்ஞானத்திலே அகமாழ்ந்தால்
மென்மையும்,மேன்மையும்.
விண்ஞானம் உணர்ந்து
மெய்ஞானத்தால் மேன்மையடைவோம்!!

Thursday, August 5, 2010

மானுட வாழ்வு

மானுட    வாழ்வே
மலைப்பும்,மகிழ்வுமாய்
சிகரம் தொட எத்தனிக்கும்
மானுடனே!சீக்கிரம் தொட்டிடுவாய்
மலைப்பு  போக்கு!மலை மடுவாகும்!!
மகிழ்வு  நிலையாகும்!!

Tuesday, August 3, 2010

நம்பிக்கைப் பாலத்தில் காத்திருக்கிறேன்

ஓசோன் படலத்திலே 
ஓட்டையாம்!
பதப்படுத்தப்படுகிறது
காயும்,பழமும்!
சேதப்படுத்தப்படுகிறது
சுற்றுச்சூழல்!


                           விண்ணுக்கும்,மண்ணுக்கும்
                          பாலம் அமைப்போம்  -அது
                          வியனுலகு தொட்டிட வேண்டும்
                           விண்ணிலே ஒரு செய்தி!அது
                           மண்ணுலகு  சமன் செய்யட்டும்
                               
                            காத்திருக்கிறேன்!!

தேசீய நெடுஞ்சாலை






வளர்ந்து கொண்டேயிருக்கும்
வறுமை  தேசீய நெடுஞ்சாலை!-ஆனாலும்
வங்காரி மாத்தாய் உருவாக்கும் வளமையும்
தேசீய நெடுஞ்சாலை!!

                                 உருக்கென உறைந்து நிற்கும்
                                 உள்ளம் தீவிரவாதம்-தேசீய நெடுஞ்சாலை!
                                 உருக்காலே உயர்ந்து நிற்கும் உள்ளம்
                                 லட்சுமி மிட்டல்-தேசீய நெடுஞ்சாலை!!

       இன்னுயிர்கள் இன்பம் பெற
      விழைந்திடும் உள்ளம்-தேசீய நெடுஞ்சாலை!                                     இன்னுயிரை இம்சிப்பதால்
      இன்பம் பெறும் உள்ளமும்
      தேசீய நெடுஞ்சாலை!!

Monday, August 2, 2010

மின்னல் பொறிகள் சன்னலுக்குள்

மின்னல் பொறிகள் சன்னலுக்குள்
இருந்த காலம் மலையேறிவிட்டது
கன்னலாய் கருத்துக்கள் சொல்லி
காரியம் ஆற்றப்  புறப்பட்டுவிட்டாள்
மின்னல் பொறி!

                  வடை வைத்து எலி பிடித்தவள்-இன்று
                  எலி வைத்து வலை பிடிக்கிறாள்!
                  கணிப்பொறிக்குள் மின்னல்பொறி!
அவல் பொரி சமைத்தவள்-இன்று\
அகிலத்தையே  ?
சன்னல் தாண்டினாள்,
சாதனை புரிகிறாள்
மின்னல் பொறி!!


Friday, July 30, 2010

குழப்பம்

தேர்வு  எழுதிடச்
செல்ல வேண்டும்
மனித உணர்வு
தேறாத இடத்தில்

                படித்த்தைத் தாளில்
                இறக்க வேண்டும்
                மடிந்த்து  மயானத்தில்
                இறங்கிக் கொண்டிருக்கிறது

கலைமகளின் அருளுக்காக
திருமகளையும் விலையாக்கி
கழகங்களின் கலகங்களால்
இருமகளும் இழப்பு

                          காகிதம்  கனமாக்குவதைத் தவிர
                         கவிஞனால் என்ன செய்ய  முடியும்?
                         அறிக்கை விட மட்டுமே முடியும்
                          அரசியல்வாதிகளால்!

பத்திரிகைகளுக்கு வெறும்
தலைப்புச் செய்திகளாய்!
கலக்கத்தின் உச்சத்தில்
காவலும் கூட!

                          எண்ணி எண்ணித் தவிப்பது
                         தவிர ஏதும் செய்ய  இயலாதோராய்
                        பொதுஜனங்கள்!
                         தீர்வு?
               ( தேர்வு  நேரத்தில் நடந்த  கலவரத்தின் போது எழுதியது)

Wednesday, July 28, 2010

கரை சேரா வைகை நதி

பாரம் சுமந்திடவே
 பாலத்தின் அடியினிலே
பதுங்கிக் கிடந்திடும்
பக்குவம் பெற்ற ஆறு

  

அணையின் கட்டினிலே
அடங்கிக் கிடந்திட்டு
அகத்தை அடக்கிடும்
அனுபவம் பெற்ற ஆறு

காசில்லாக் காரணத்தால்
காலங்கள் கடந்திடினும்
கரையைச் சேர்ந்திடாது
காத்திருக்கும் கன்னி ஆறு

கரை  சேராமலிருப்பது
வைகை மட்டுமல்ல
வாழ்வு  தேடும் பல
வாலிப உள்ளங்களும்!

Monday, July 19, 2010

சருகாகாத மலர்கள்

தேசம் வாழ வாழ்ந்த
காந்தி
சருகாகாத மலர்

அமைதிப் புறா தனை ஏந்திய
நேரு
சருகாகாத மலர்

பாமரனும் பாக்களை மாந்த
பா தந்த பாரதி
சருகாகாத மலர்

ஆருயிர்க்கெல்லாம் அன்பு வேண்டிய
அருட்பிரகாசர்
சருகாகாத மலர்

நாடு செழிக்க,நன்மை தழைக்க
நாடும் உயிரெல்லாம்
சருகாகாத மலர்களே!