Friday, April 1, 2011
பிரிவுபசாரம்
மோகனத்தில் தொடங்கி
முகாரியில் முடிந்திடும்
முற்றிலும் வித்தியாசமான
சங்கீதக் கச்சேரி !
இங்கு,
பார்வையாளர்களே
பாடகர்களாய் !
வித்துவான் பார்வையாளராய்!
விழாக் கதாநாயகனாய் !
விதவிதமான ஆலாபனை
ஆரோக,அவரோகணங்களும்!
கச்சேரியில்
ஆரோகணத்தின் அளவு
அதிகமாய் இருக்கும்
அவரோகணம் சற்று
அடக்கி வாசிக்கப்படும்
இக் கச்சேரியில்,
வசை பாடுதல் மறைக்கப்பட்டு
வாழ்த்திலே தொடங்கி
மங்களத்திலே முடியும்
வழக்கமான கச்சேரி!
Tuesday, March 29, 2011
ஐம்பது
ஆடி அடங்கும் வாழ்வினிலே-பண்
பாடி முடித்திட்ட பாதி நிலை
இன்பமும்,துன்பமும் ஐம்பதைம்பதாய்ப்
பார்த்து அனுபவம் சேர்த்த அபூர்வநிலை
முன்நிலை நினைத்து மனம் ஏங்கும்
பின்நிலை நினைத்து பயம் வாங்கும்
செக்குமாடு வாழ்வானாலும் தேசம் பல
சென்று கண்ட வாழ்வேயாயினும்
சேகரித்த அனுபவம்
சிந்தையிலே பல கோடி
மலரும் நினைவுகளிலே
மனம் மூழ்கிடினும்
மரண பயமும் எட்டிப் பார்க்கும்
கலக்கம் கழற்றி வாழும்
கலையினால் என்றும்
களிப்பே!
ஔடதம்
மழலையின் மயக்குமொழி
மாதாவுக்கு மருந்து
மனைவியின் மந்திரமொழி
மணாளனுக்கு மருந்து
தாயின் பரிவுமொழியே
தவிப்புக்கு மருந்து
தந்தையின் தரம்நிறை வழியே
தரணியில் உயர்ந்திட மருந்து
குருவின் வழி காட்டலே
கும்பிட்டு ஏற்றிடும் மருந்து
தெய்வத்தின் திருவடியே
தேவையான அருமருந்து
மருந்தினை அருந்தினால்
பெருந்துயர் போகும்
விருந்தாகும் வாழ்வே !!
Sunday, March 27, 2011
மாய வாழ்வு
மாதாவின் மடி தோன்றி
மண்ணிலே மறைந்திடும்
மாயவாழ்வு இடையில்
மறந்து போவதேனோ?
கருவிலே உருவாகி
காலனின் காலடியே
கடைசியில்,என்பதுவும்
கரைந்து போவதேனோ?
காற்றாகி ,கனலாகி
ஊற்றாகிப் பரிணமிக்கும்
இயற்கையின் உன்னதம்
இடையில் உறைந்து போவதேனோ?
எங்கும் நானே,எதிலும் நானே
என எக்காளமிடுவதேனோ?
மாறட்டும்,மறையட்டும்
மறந்திடட்டும் மாயவாழ்வு!
Subscribe to:
Posts (Atom)