பாரதத் தாயே !
அந்நியரின் தாக்குதலாலே
அவதியுற விடாது
முப்படை வீரரும்
முழு மூச்சுடன் காப்பரே!-இம்
மண்ணில் இருந்தே உனை
இன்னல் செய்வோரை
என்ன செய்வது?
நாட்டோரே உனை
நாசம் செயும்போது உனக்கு
எங்கிருந்து வரும் சுவாசம்?
நித்தம் ஒரு
சாதிச் சண்டை,
நாளும் ஒரு
மதக் கலவரம்.
குருதி கொதிக்கிறது -ஆனால்
கும்பிட்டு வழி விடுகிறோம்
கொலை பாதகரைக் கண்டு
உனது உடலெல்லாம்
இரண களம்-உன்னை
மலரால் வருடிவிட
நீட்டிய கைகளை
மத வெறியன் வெட்டினான்
சந்தனம் பூசிவிட
நீட்டிய கைகளை
சாதி வெறியன் சிதைத்தான்
சந்தனம் ,மலரோடு
குருதியும் மண்ணில்
உனக்கு அபிஷேகமாய்!
மாறுமா?மறையுமா?
மகிழ்வான நிலை மலருமா?
இந்திய அன்னையே,
புகழ் வடிவான உன்னை
புண்ணாக்குகின்றனர் புல்லர்கள்
புல்லர்களை அழித்துப்
புரட்சி செய்யும் போது தான்
புனிதம் பெறுவாயோ?
No comments:
Post a Comment